புதுடெல்லி: நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை வரும் 20ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை கருணைக் கொலை செய்யும்படி அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திகார் சிறை எண் 3ல் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட அனைத்து ஏற்பாடுகளையும் சிறை நிர்வாகம் செய்து முடித்து தயார் நிலையில் வைத்துள்ளது. இதற்கிடையில், அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி தூக்குதண்டனையில் இருந்து 3 முறை தப்பித்த குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங்(32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26) மற்றும் அக்ஷய் குமார் சிங்(31) ஆகியோர் வாய்ப்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததையடுத்து மரண தண்டனைக்கான நாட்களை எண்ணிக்கொண்டு உள்ளனர்.