சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாநில தலைவர் அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தலைநகரான டெல்லியில் வேகமாக பரவியிருக்கிறது. மத்திய அரசை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவை தற்காலிகமாக நிறுத்தியது, அண்டை மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறது. கொரோனா காரணமாக கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் மரணமடைந்திருக்கின்றனர்.