லண்டன்: சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஏப்.20 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 3வது வாரம், 4வது வாரம் மற்றும் ஏப்ரலில் முதல் இரண்டு வாரங்களில் நடைபெறுவதாக இருந்த மகளிர் ஐடிஎப் உலக டென்னிஸ் டூர், ஜூனியர் ஐடிஎப் உலக டென்னிஸ் டூர், வீல்சேர் டென்னிஸ், ஐடிஎப் பீச் டென்னிஸ் உலக டூர் மற்றும் ஐடிஎப் சீனியர்ஸ் டூர் ஆகிய போட்டிகள் அனைத்தையும் தள்ளி வைத்து, சர்வதேச டென்னிஸ் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சர்வதேச டென்னிஸ் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் (கோவிட்-19) பரவி வருகிறது என்ற செய்திகளை கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சர்வதேச அளவில் போட்டி அமைப்பாளர்கள், போட்டிகளுக்கான மருத்துவக் குழுவினர், பயணங்களை ஏற்பாடு செய்யும் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என அனைவரிடமும் கலந்து ஆலோசித்த பின்னர், சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகள் அனைத்தையும் ஏப்.20ம் தேதி வரை தள்ளி வைப்பது என்று முடிவெடுத்துள்ளோம்.