டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 12 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு இதுவரை கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது.
பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன. வெளிநாட்டினருக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்தியாவில் இதுவரை 102 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 2 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் முதல் உயிரிழப்பும், அதனை தொடர்ந்து டெல்லியிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் பரவல் என்பது அவ்வளவு தீவிரமாக இல்லை என்பது தான் அரசின் கருத்தாக இருக்கிறது.
இதற்காக அரசின் சார்பில் மென்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தினமும் சுகாதாரத்துறை விளக்கி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.