மதுபாட்டிலில் உள்ள 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு'என்ற வாசகத்தை மாற்றுகிறது தமிழக அரசு

சென்னை:  மதுபாட்டிலில் உள்ள மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்ற வாசகத்தை தமிழக அரசு மாற்ற முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுபான கடைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்புமே பாரபட்சமின்றி குவிந்து வருகின்றனர். 2010ம் ஆண்டு, சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.34.000, தினமும் 336 பேர் விபத்துகளில் மரணமடைகின்றனர். மது மற்றும் போதைமருந்து தகவல் மையத்தின் ஆய்வுப்படி, 40% சாலை விபத்துகள் குடிபோதையினால் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், இனி மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்ற வாசகம் மதுபான பாட்டில்களில் இடம் பெறுகிறது.

1937ம் ஆன்டு முதல் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்ற வாசகம்தான், தமிழகத்தில் மதுபான பாட்டில்கள் மீது எழுதப்பட்டிருந்தது. முதல் முறையாக அந்த வாசகம் மாற்றப்பட்டு புது வாசகம் சேர்க்கப்படுகிறது. மது வீட்டுக்கும், உயிருக்கும் வேண்டுமானால் கேடாக இருக்கலாம், ஆனால் நாட்டிற்கு, அதாவது அரசின் கஜானாவுக்கு கேடு இல்லையே என யாரோ அரசுக்கு ஐடியா கொடுத்து இப்படி மாற்ற வைத்துவிட்டனரா? என்று தெரியவில்லை. ஆனால், குடித்து கெட்டுப் போகும் மனிதன், உடல் நலம், மனநலம் இன்றி அல்லாடுவது, நாட்டிற்கே கேடுதானே. இந்த வார்த்தையில் என்ன தப்பு என்றுதான் தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: