ஒரு கோடி மக்கள்தொகை உள்ள நகரங்களில் பெண்களுக்காக பிங்க் நிற பேருந்து: அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களில் பெண்களுக்கான பிங்க் நிற சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம் கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. சிஏஏ, டெல்லி கலவரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், கடந்த வாரம் முழுவதும் மாநிலங்களவை, மக்களவை அலுவல்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று மக்களவையில் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் பெண்களுக்கான பிங்க் நிற சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளில் அவசர கால அழைப்புக்கான பட்டனும், சிசிடிவி கேமராவும் பொருத்த பேருந்து தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் ஓட்டுனர், நடத்துனர், பயணிகள் என அனைத்தும் பெண்கள் மயமாக அமைய உள்ளது. ஏற்கனவே சில நகரங்களில் இத்தகைய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்று, இருசக்கர, மூன்று சக்கர எலக்ட்ரிக் வாகனங்களும் பெண் பயணிகளுக்காக அறிமுகப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்களுக்கான வேலை வாய்ப்பும் அதிகரிக்கப்படும். இவ்வாறு கட்கரி கூறினார்.

Related Stories: