தேனி: போடி வனப்பகுதியில் மீண்டும், மீண்டும் தீ வைக்கும் கும்பலை பிடிக்க வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி மாவட்டம் போடி வனப்பகுதியில் இருந்து பெரியகுளம் வனப்பகுதி வரை உள்ள வனநிலங்களில் ஒரு கும்பல் தீ வைத்து, மரங்களை எரித்து கரித்துண்டுகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பற்றி எரிந்த தீயை நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு துறை, வனத்துறை, கிராம வனக்குழு உறுப்பினர்கள் அணைத்தனர். தீயணைக்கும் பணிகளை முடித்து விட்டு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் இவர்கள் ஊருக்கு திரும்பினர். இந்நிலையில், நேற்று பகலில் மீண்டும் தீ பற்றி எரிய தொடங்கியது. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பிறகு மீண்டும் ஒரு கும்பல் இங்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது.