உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குக் கோடைகாலத்தில் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுோறும் அதிகரித்து வருகிறது. இது அந்த மலைப்பிரதேசங்களின் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி அதனை கட்டுப்படுத்த, கொரோனா காலத்தைப் போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும். அதற்கான இணையப் பக்கத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. அதில் பச்சை, ஊதா, நீலம் என மூன்று நிறங்களைக் கொண்ட கோடுகளுடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதைப் பெற்றால் மட்டுமே வாகனங்கள் இந்த இடங்களுக்குள் செல்ல அனுமதியளிக்கப்படும். இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை தமிழ்நாடு அரசு மே 5-ஆம் தேதி வெளியிட்டது.
இ-பாஸ் பதிவிற்காக உள்ளே சென்றவுடன் உள்ளூர் ஆட்களுக்கான (Localite pass) இ-பாஸ், முந்தைய பாஸ்கள் (Previous Passes) என்ற இரண்டு தெரிவுகள் இருக்கும். அதில் உள்ளூர் மக்கள் உரிய ஆவணங்களைப் பதிவுச் செய்து இ-பாஸ் பெறலாம். முன்பே இ-பாஸ் பெறப் பதிவு செய்திருந்தால் முந்தைய இ-பாஸ் என்ற தேர்வில் சென்று பதிவு செய்த இ-பாஸைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இணையப் பக்கம் தானியங்கி முறையில் இ-பாஸ் வழங்கும் வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. எனவே, நீங்கள் இணையப் பக்கத்தில் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்தவுடன் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.
The post கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.