தூத்துக்குடி: சிவகளை, ஆதிச்சநல்லூரில் வருகின்ற மார்ச் 15ம் தேதி அகழாய்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளது. அகழாய்வு பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கிவைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தொல்லியல் களத்தில் வருகின்ற 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அகழாய்வு பணியானது தொடங்கவுள்ளது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் தொல்லியல்துறை அதிகாரிகளும் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். தொடர்ந்து, சிவகளை அகழாய்வு பணிக்காக ரூபாய் 32 லட்சமும், ஆதிச்சநல்லூருக்கு ரூபாய் 28 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிவகளையில் 4 குழிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆதிச்சநல்லூரில் பெரியளவில் குழி அமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்ற இந்த அகழாய்வு பணியானது கிட்டத்தட்ட 8 மாதங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஆதிச்சநல்லூரில் 2004ம் ஆண்டு தொல்லியல்துறையினர் அகழாய்வு பணிகளை நடத்தினர். அந்த அகழாய்விற்கான அறிக்கையானது இன்னும் சமர்பிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆய்வானது விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.