ராஜ்கோட்: பெங்கால் அணியுடனான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 425 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 384 ரன் எடுத்திருந்தது. தேசாய் 38, அவி பரோட், விஷ்வராஜ் ஜடேஜா தலா 54 ரன், வாசவதா 106, புஜாரா 66 ரன் விளாசினர். சிராக் ஜனி, தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 13 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சிராக் 14 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் 20 ரன் எடுத்து ஷாபாஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 425 ரன் குவித்து (171.5 ஓவர்) ஆல் அவுட்டானது. தர்மேந்திரசிங் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.