ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரம்: சபாநாயகர் அளித்த நோட்டீஸ்க்கு பதில்தர ஒரு மாதம் அவகாசம்...11 எம்எல்ஏக்கள் சார்பில் கோரிக்கை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ல் பதவி ஏற்றதும் பிப்ரவரி 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர்   ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் அவரது அரசுக்கு எதிராக, கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள்   பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி பெரும்பான்மையை இழக்கவில்லை. இதையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானமும் வெற்றி பெற்றது.

இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை.   இதையடுத்து திமுக தரப்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தி.மு.க சட்டசபை கொறடா   சக்கரபாணி தரப்பில் உச்ச நீதீமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, பிப்ரவரி 14-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு  சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் மீது அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வார் என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை முடித்து  வைப்பதாக உத்தரவிட்டார். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், சபாநாயகர் அளித்த விளக்க நோட்டீஸ்க்கு பதில்தர ஒரு  மாதம் அவகாசம் கேட்டு 11 எம்எல்ஏக்கள் சார்பில் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: