ஈரான்: கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ள ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஈரான் அருகே உள்ள தீவில் சிக்கியுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் வாட்ஸ்அப் வாயிலாக தங்களது நிலையை விளக்கி வீடியோ அனுப்பியுள்ளனர். அதில், 900 மீனவர்கள் ஈரானில் சிக்கி தவிப்பதாகவும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஈரானில் தங்கி படிக்கும் வட இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாக இந்திய தூதரகம் மூலம் அறிந்ததாக மீனவர்கள் கூறியுள்ளனர். மீனவர்கள் தங்கியுள்ள தீவிலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.