தோஹா: கொரோனா வைரஸ் பீதியால், இந்தியா உள்பட 14 விமானத் தொடர்பினை கத்தார் அரசு துண்டித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,827 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,129 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. நேற்றைய கணக்கின்படி அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 366 ஆக உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 133 பேர் மரணித்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதேபோல் ஈரானிலும் 194 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.