சென்னை: வாலிபால் போட்டி பரிசளிப்பு விழாவில் நடந்த தகராறில் 2 ரவுடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீரா (28). அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மீது வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் பொன்னேரி, திருப்பாலைவனம், சோழவரம் மற்றும் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தில் வாலிபால் போட்டி நேற்று காலை நடைபெற்றது. மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவை பார்ப்பதற்காக இருவரும் சென்றனர். அப்போது அவர்களுக்கும் அங்கிருந்த சில வாலிபர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிலர், அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து இருவரையும் சரமாரியாக அடித்துள்ளனர். கத்தியாலும் வெட்டியுள்ளனர். இதில், கிழே விழுந்த இருவரது தலையில் கல்லை தூக்கி போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.