பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தினசரி வீடுகளில் சேகரமாகும் மக்கும் குப்பைகளை கொண்டு நுண் உரம் செயலாக்க மையத்தின் மூலம் உரமாக்கும் பணி, மக்காத குப்பைகளை அரியலூர் சிமென்ட் ஆலைக்கு அனுப்பியும், எலக்ட்ரானிக் கழிவுகளை மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தில் ஒப்படைத்தும், நாப்கின் போன்ற அபாயகரமான கழிவுகளை இன்ஸினேரட்டர் மூலம் எரித்தும் திடக்கழிவுகள் தரம் பிரித்து முறையாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு குப்பைகளை தரம் பிரித்து அனுப்புவதால் உரக்கிடங்குக்கு குப்பைகள் செல்லாமலும், எங்கும் குப்பைகளை கொட்டி குவிக்காமலும், வைக்காமலும் பராமரிக்கப்படுகிறது. நகரில் இதுவரை பயன்பாட்டில் இருந்த 122 குப்பை தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகளை அவர்களே தரம் பிரித்து நகராட்சி துப்புரவு பணியாளரிடம் ஒப்படைக்கும் சூழல் உள்ளது. 2 குப்பை தொட்டிகள் வைக்காத வீடுகள், நிறுவனங்கள் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து தராத நிறுவனங்கள், வீடுகளுக்கு அபராதம் விதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் குப்பைகளை தரம் பிரித்து தராத ஒரு சில வீடுகள் மற்றும் நிறுவனங்கள் இரவு நேரங்களில் பொது இடங்களில் சட்டத்துக்கு புறம்பாககொட்டி வருவதும் அப்பகுதியை துப்புரவு செய்து அங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் நிறுவி நகராட்சியால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.