மேலூர்: டிஎன்பிஎஸ்சி வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம்காந்தனிடம் சிபிசிஐடி போலீசார், மேலூர் நான்கு வழிச்சாலையில் 3வது முறையாக நேற்று விசாரணை நடத்தினர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோர், மதுரை மாவட்டம், மேலூர் 4 வழிச்சாலையில் நாவினிப்பட்டி அருகில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக ஏற்கனவே 2 முறை இங்கு வந்த சிபிசிஐடி போலீசார், விடைத்தாள்களில் எப்படி முறைகேடு நடந்தது என்பது குறித்து, நடித்து காட்டும்படி கூறி அதை விஏஓ முன்னிலையில் பதிவு செய்து சென்றனர். இந்நிலையில் கடந்த 2016ல் நடந்த விஏஓ தேர்விலும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை சிபிசிஐடி போலீசார், 10 பேரை கைது செய்துள்ளனர். இதிலும் முக்கிய குற்றவாளிகளாக ஜெயக்குமார், ஓம்காந்தன் உள்ளனர். எனவே, அவர்களை சென்னையில் இருந்து சிபிசிஐடி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மேலூர் நான்கு வழிச்சாலைக்கு அழைத்து வந்தனர்.