சென்னை: திருப்போரூர் ஒன்றியம் அனுமந்தபுரம் கிராமத்தில் புகழ் பெற்ற அகோர வீரபத்திர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் சிறுங்குன்றம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த கோயில் நிலத்தில் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை சிலர், திருட்டுத்தனமாக கொட்டி வந்தனர். இதனால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், இதனை யார் கொட்டுகின்றனர் என தெரியாமல் இருந்து வந்தது. இதற்காக, பொதுமக்கள், அந்த இடத்தில் குப்பை கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மருத்துவ கழிவுகளை, ஒரு வேனில் கொண்டு வந்து கொட்டுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அனுமந்தபுரம், சிறுங்குன்றம் ஆகிய கிராம மக்கள் அங்கு சென்றனர். அப்போது, கழிவுகளை கொண்டு வந்த ஒரு மினி வேன் மற்றும் ஒரு பெரிய வேன் ஆகியவற்றை மடக்கிப் பிடித்தனர்.