கொரோனா பாதிப்பு: சீனா, ஈரான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்...மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சீனா, ஈரான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், சீனாவை மட்டுமல்லாது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்திய இந்த நோய், சீனாமட்டுமின்றி சுமார் 60 நாடுகளில் பரவி உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வந்தது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது; டெல்லி மற்றும் தெலுங்கானாவில் கொரோனா வைரஸின் மூலம்  2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்  இத்தாலி மற்றும் துபாயிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்து வந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்முலம் இந்தியாவில் மொத்தம் 5 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான  நிலைமை உருவாகும்போது, மற்ற நாடுகளுக்கு செல்லும் பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படலாம்.

பயண ஆலோசனையின் கீழ், சீனா மற்றும் ஈரானுக்கு இ-விசாக்கள் உள்ளிட்ட தற்போதுள்ள விசாக்கள் இடைநிறுத்தப்படும். சீனா, ஈரான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்துகிறோம். 21 விமான நிலையங்கள், 12 முக்கிய துறைமுகங்கள் மற்றும் 65 சிறு துறைமுகங்களில் பயணிகளின் திரையிடபட்டுள்ளனர். விமான நிலையங்களில் இதுவரை 5, 57,431 பயணிகள் திரையிடப்பட்டுள்ளனர் மற்றும் சிறிய மற்றும் பெரிய துறைமுகங்களில் 12,431 பயணிகள் திரையிடப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: