தோஹா: ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமான அமெரிக்கா - தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.ஆப்கானிஸ்தானில் கடந்த 1994ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரால் தலிபான் தீவிரவாத அமைப்பு உருவானது. இந்த அமைப்பு புரட்சி மூலமாக 1996ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றி, 2001ம் ஆண்டு வரை பதவியில் இருந்தது. ஆப்கன் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா நுழைந்து, தலிபான்களுக்கு எதிரான தனது படைகளை அனுப்பி போரிட்டது. இதில் தலிபானிடமிருந்து ஆட்சி அதிகாரம் பறிக்கப்பட்டது. கிளர்ச்சிப் படையான தலிபான், கடந்த 18 ஆண்டாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க படையை குறிவைத்து பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தியது. இதனால், ஆப்கனில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர தலிபானுடன் அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது.