பாரீஸ்: பகல் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கினால், அங்கே தூக்கத்தை கெடுக்கும் வகையில் நச்சு, நச்சு என்று கடிக்கும் மூட்டைப்பூச்சிகளால் பிரான்ஸ் நாட்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் மூட்டை, மூட்டை என்றுதான் செய்திகள் பறக்கின்றன. இதையடுத்து, அவசர உதவி எண்ணை அறிவித்துள்ள அரசு, 100 நாளில் அதை ஒழித்துக் கட்டுவதாக மக்களுக்கு உறுதி அளித்துள்ளது.வீடுகளில் இருக்கும் சிறிய துளைகளில் வசிப்பவை மூட்டைப்பூச்சிகள். இவை கொசுக்களை விட பயங்கரமானவை. சத்தமில்லாமல் ரத்தத்தை குடித்து, தடிப்பு மற்றும் அலர்ஜி போன்ற பிரச்னைகளையும் விட்டுச் செல்பவை. இவை கடிக்கும்போது மனிதனின் உடம்பில் தன்னுடைய சிறப்பு திரவத்தை செலுத்துகின்றன. அப்போது அந்தப்பகுதி மரத்துவிடும். இதனால்தான் மூட்டைப்பூச்சி முழுவதுமாக ரத்தத்தை உறிஞ்சும் வரையில் நமக்கு தெரிவதில்லை. அவை ரத்தத்ைத குடித்துவிட்டு விலகுமபோதுதான், எரிச்சல் உணர்வு வந்து பார்க்கிறோம். அதற்குள் அவை ரத்தத்தை உண்டு கொழுத்துக்கிடக்கும்.
ஆனால், கொசுக்களைப் போன்று இவை, நோய்களை பரப்புவதில்லை என்பது ஆறுதலான விஷயம்.மூட்டைப்பூச்சி தொல்லை என்பது சினிமா தியேட்டர்களில்தான் ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து மருந்து தெளிப்பு, எளிதில் கிடைத்த பாதுகாப்பான மருந்து ஸ்பிரேயர்கள் ஆகியவற்றால் இவை ஒழித்துக்கட்டப்பட்டன. எனினும் கூட, இன்னமும் சிறிய நகரங்களில் மூட்டைப்பூச்சி தொந்தரவு முற்றிலுமாக நீங்கவில்லை.