கோடா: முன்பதிவு டிக்கெட் ரத்து, காத்திருப்போர் பட்டியலில் ரத்து செய்யப்படாத டிக்கெட் ஆகியவற்றின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வேக்கு 9,000 கோடி வருவாய் கிடைத்துள்து. சமூக ஆர்வலர் சுஜீத் சுவாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரிய விவரங்களுக்கு பதில் அளித்து ரயில்வே தகவல் ஆணைய மையம் அளித்த விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017 ஜனவரி 1ம் தேதி முதல் 2020 ஜனவரி 31ம் தேதி வரையிலான, மூன்று ஆண்டுகளில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து டிக்கெட்டை ரத்து செய்யாத 9.5 கோடி பயணிகளின் டிக்கெட் மூலம் ரயில்வேக்கு 4,335 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல, படுக்கை வசதி உறுதியான டிக்கெட்டை ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 4,684 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட் ரத்து முதலிடத்திலும், மூன்றடுக்கு ஏசி படுக்கை வசதி, இரண்டடுக்கு ஏசி படுக்கை வசதி டிக்கெட் ரத்து 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.