கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் 65ம் ஆண்டு கொடை விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாளான நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு ராஜகணபதிக்கு கணபதி ஹோமம், மாலை 6.30 மணிக்கு கோயிலில் உள்ள 18 படிகளுக்கும் படி பூஜைகள், இரவு 8.30 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி குதிரையில் வலம் வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சாமகொடை பூஜையும் நடந்தது.
தொடர்ந்து அதிகாலை 12.30 மணிக்கு கோயில் பூசாரி கருப்பசாமி, 21 அரிவாள்களில் 68 முறை நடந்து சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். நேற்று காலை 7 மணிக்கு 21 அக்னிசட்டியுடன் பவனி வருதலும், 9 மணிக்கு கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கலிட்டும் சுவாமியை வழிபட்டனர். மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு பழ பூஜைகள் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு உலக மக்கள் நலன் வேண்டியும், மழை பொழிந்து வசாயம் செழிக்கவும் பூசாரி கருப்பசாமி, மீண்டும் 21 அரிவாள்கள் மீது 68 முறை வலம் சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார்.