கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நெல்லை விடுதியில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை: தாய் சிக்கினார்; தப்பியோடிய காதலன் கைது

நெல்லை: நெல்லையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவன் அடித்துக் கொலை  செய்யப்பட்டான். இதுதொடர்பாக சிறுவனின்  தாயை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய காதலன் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம்  விகேபுரம் அருகே உள்ள டானா ஆம்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர்  அந்தோணி பிரபு. இவருக்கும், பொள்ளாச்சியைச் சேர்ந்த தீபா (28) என்பவருக்கும்  கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் யோகேஷ்  என்ற மகன் உள்ளான். கேஸ் டேங்கர் லாரி டிரைவரான அந்தோணிபிரபு கேரளா,  கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று  விடுவார். தீபா, நர்சிங் முடித்துள்ளார். கணவர் அடிக்கடி வெளி  மாநிலங்களுக்கு சென்று விடுவதால் தீபா தனது 4 வயது மகனுடன் பெரும்பாலான  நாட்களில் தனியாக வசிப்பார். இந்நிலையில் அருணாசலபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சொரிமுத்து (23)  என்பவருடன் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவர், தனியார் நிறுவனத்தில்  சுயஉதவிக்குழு கடன் வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். தீபா, தனது உறவினர் ஒருவருக்கு சுயஉதவிக் குழுவில் கடன் பெற்று இருந்ததால் அந்த கடனை வசூலிக்கும் பொருட்டு  சொரிமுத்து அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்று வந்தார். நாளடைவில் இந்த  பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அந்தோணி பிரபு வீட்டில் இல்லாத நேரத்தில்  தீபா தனது மகனை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு  சென்று வந்தார். கடந்த 20ம்தேதி மகனுடன் வீட்டை விட்டு வெளியேறிய  தீபா, கள்ளக்காதலனுடன் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள விடுதியில்  தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மதியம் 3 பேரும் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு சென்றனர். அப்போது தற்செயலாக அந்தோணி பிரபு தனது மனைவிக்கு போன்  செய்தார். போனை எடுத்த யோகேஷ் தனது தந்தையிடம் நெல்லையப்பர் கோயிலுக்கு  அம்மாவுடன் வந்திருப்பதாக தெரிவித்துள்ளான்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்தோணிபிரபு தனது மனைவி தீபாவிடம் வீடியோ காலில் வரும்படி கூறியுள்ளார். ஆனால் அவர், வீடியோ காலில் செல்லவில்லையெனத் தெரிகிறது. இந்நிலையில் போனில் தந்தையிடம் யோகேஷ் கூறியதால் ஆத்திரமடைந்த சொரிமுத்து, அவனை கோயிலில் வைத்து தாக்கியதாக  தெரிகிறது. இதையடுத்து 3 பேரும், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதிக்கு மீண்டும் வந்தனர். அங்கு வைத்து மீண்டும் சிறுவன் யோகேசை,  சொரிமுத்து தாக்கியுள்ளார். இதில் கன்னத்தில் அடிபட்டு மயங்கி  விழுந்த அவனை, தீபா, சொரிமுத்து ஆகியோர் தூக்கிக் கொண்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அங்கு சிறுவன் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக கூறி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் யோகேஷ் நேற்று காலையில் இறந்தான். இதற்கிடையில் சொரிமுத்து தலைமறைவாகி விட்டார்.

தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் சென்று தீபாவை பிடித்து விசாரணை நடத்தினர்.  இதில் அவர், சொரிமுத்து சிறுவனை அடித்ததாகவும், கோயிலில் இருந்த போது  சிறுவன் கீழே விழுந்ததாகவும், பின்னர் பஸ்சில் ஏறும் போது கீழே விழுந்ததாகவும் மாறி மாறி கூறியுள்ளார். இதைதொடர்ந்து தீபாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை அந்தோணிபிரபு மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கள்ளக்காதலன் சொரிமுத்துவை கைது செய்தனர். இதற்கிடையில் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் இரவு 7 மணிக்கு உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு டாணா அருகேயுள்ள அனவன்குடியிருப்பு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: