டெல்லி: கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார். நமது இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் இடையே பிரதமர் மோடி உரையாற்றுவார். நமது வேற்றுமையில் ஒற்றுமை என்பது, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே, மதிப்புமிக்க பொக்கிஷமாக விளங்குகிறது என பிரதமர் மோடி பேசினார். இதனை நாம் பாதுகாத்து ஆராய வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர். சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்ட நிகழ்ச்சியை பார்க்க இஸ்ரோ சென்ற போது, குழந்தைகளின் உற்சாகத்தை காண முடிந்தது. நமது இளைஞர்கள் மத்தியில், அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். ராக்கெட் ஏவப்படுவதை, ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து நீங்கள் நேரடியாக பார்க்கலாம் என கூறினார். இதற்காக 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என பேசினார். இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.