திருச்சி: திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்த தம்பதி ராஜகோபால் - மேரி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது மகன் மணிகண்டன்(38). சிறு வயதிலேயே காசிக்கு சென்று அகோரியாக மாறி விட்டார். (ஆண் அகோரிகள் பூஜையின்போது சிவப்பு நிற லங்கோடு மட்டும் அணிந்து உடல் முழுவதும் திருநீறு பூசி இருப்பார்கள். பெண் அகோரிகள் சிவப்பு நிற சுடிதார் அணிந்திருப்பார்கள்) நள்ளிரவில் பூஜை செய்வது, சுடுகாட்டில் எரியும் சடலத்தின் மாமிசத்தை சாப்பிடுவது ஆகிய செயல்பாடுகளில் அகோரிகள் ஈடுபடுவதாக கூறப்படுகறது. திருச்சி அரியமங்கலம் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. இதை அகோரி மணிகண்டன் நிர்வகித்து வருகிறார். இக்கோயிலில் கடந்த ஆண்டு அஷ்ட கால பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி உள்ளிட்ட விசேஷ காலங்களில் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.