வேலூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற விஏஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற சிறப்பு முகாம் அனைத்து விஏஓ அலுவலகங்களில் நாளை நடக்கிறது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளர். இதுகுறித்து வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கிசான் கிரெடிட் கார்டு எனும் விவசாயிகளுக்கான கடன் அட்டையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான கடனை பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். விவசாய நிலங்கள் பட்டா வைத்திருக்கும் விவசாயிகள் இந்த கடன் அட்டை பெற தகுதியுடையவர்கள். நிலத்தின் அளவை பொறுத்தும் பயிர் செய்வதற்கு தேவையான செலவினங்களை கருத்தில் கொண்டும் கடன் வழங்கப்படும். உழவர் கடன் அட்டை அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், விவசாய கூட்டுறவு சங்கங்களிலும் பெறலாம்.

இந்த திட்டத்தின் மூலம் ஈட்டுறுதி இல்லாமல் ரூ1.60 லட்சம் வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ3 லட்சம் வரையிலும் கடன் பெறலாம். இந்த கடன் அட்டையின் கால அளவு 5 ஆண்டுகள். வேறு எந்த திட்டத்திலும் இல்லாத வகையில் கடனை குறித்த காலத்திற்குள் சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் பெற வசதி உள்ளது. பிரதம மந்திரி விவசாயி கவுரவ நதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெறுவதற்கு தாங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகி உழவர் கடன் அட்டைகள் பெறலாம். உழவர் கடன் அட்டை வழங்குவதற்காக சிறப்பு பிரசாரம் மத்திய அரசு மூலம் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இதன்மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.

ஒரு பக்க படிவத்தில் தங்களது நிலம் மற்றும் பயிர் விவரங்கள் ேவறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதி பிரமாணம் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் பயன்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடக்க உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் தங்களுடைய வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நில ஆவணங்களுடன் அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விஏஓ அலுவலகங்களில் நாளை விவசாய கடன் அட்டை பெற  சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை நகல், இரண்டு போட்டோ, வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். மேலும் அடங்கல் மற்றும் விவசாய கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முகாம் நடைபெறும் இடத்தில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய வங்கிக்கு அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.  நாளை காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இம்முகாம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: