சேலம்: நீட் தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியை சேர்ந்த புரோக்கர் சேலம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவரான உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் தேனி சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த சிலரும் கைதாகினர். அதே போல தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவரான வாணிம்பாடியை சேர்ந்த இர்பானை, அவரது தந்தை டாக்டர் முகமது சபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வீரமலை பக்கமுள்ள செல்லம்பட்டியை சேர்ந்த வேதாச்சலம்(60) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்தான் நீட் தேர்வு மோசடிக்கு முக்கிய புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.