சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி சார்பில் 36 ஆயிரத்தி 445 மரக்கன்றுகள் நடப்பட்டன. இவற்றுக்கு வாரம் 2 முறை தண்ணீர் விட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. செயல் அலுவலர் கலையரசியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளிலும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. குறிப்பாக சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி மைதானம், வி.எம்.எஸ்.காலனி, சிக்கனம்பட்டி, மேட்டுப்பட்டி, சோமசுந்தர காலனி, காமாட்சி நகர், கருணாநிதி காலனி, ஏ.டி.எஸ்.நகர், பேரூந்து நிலைய சாலை, சின்னாளபட்டியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டன. சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 12ம் தேதி வரை 36 ஆயிரத்து 445 மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தது. தற்போது பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டர்கள் மற்றும் தண்ணீர் வாகனங்கள் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுகிறது.