இரவில் திருமயம் பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வராததால் மக்கள் அவதி: கலெக்டரிடம் மனு அளிக்க ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருமயம்: திருமயத்தில் இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டுக்கு வர மறுக்கும் அரசு பஸ் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் முறையிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி கூட்டம் தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இளஞ்சாவூர் முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா குறித்து வரும் 22ம் தேதி கூட்டம் நடத்தப்படும். திருமயம் ஊராட்சியில் நடைபெறும் தினசரி மகமையையும், ஊராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் விடுவது, ஏற்கனவே உள்ள கடைகளுக்கு வாடகை, வரி வசூல் செய்வதோடு ஆக்ரமிப்பு செய்து கடை வைத்திருப்பவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பி கால அவகாசம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் திருமயத்தில் பைபாஸ் சாலை அமைக்கப்பட்ட நாளில் இருந்து பெரும்பாலான அரசு பஸ்கள் இரவு நேரங்களில் திருமயம் பஸ் ஸ்டாண்டுக்கு வருவதை தவிர்க்கின்றன. இதற்கு தீர்வு காண கடந்த 10 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டரிடம் இது பற்றி மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பழுதடைந்துள்ள நீர் தேக்க தொட்டிகள், மோட்டார்கள் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதோடு தேவைப்படும் கிரமங்களுக்கு புதிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: