மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன், தூக்கு தண்டனையை ரத்து செய்க : முந்தைய வழக்கின் தீர்ப்பை மேற்கோள்காட்டி வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா குற்றவாளி வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வினய் சர்மா கருணை மனு நிராகரிப்பு

நிர்பயா பலாத்கார கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் அந்த மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டார்.

வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு

இந்நிலையில் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா குற்றவாளி வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.வழக்கறிஞர் ஏ பி சிங் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், வினய் சர்மா சிறையில் இருந்த போது, அவருக்கு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை கொடுக்கப்பட்டுள்ளதாகவும். ஆதலால் வினய் சர்மா psychological trauma எனப்படும் உளவியல்  ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் விதிமுறைகளை மீறி வினய் சர்மா தனியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், உடல் ரீதியான தாக்குதல் மற்றும் சித்திரவதை காரணமாக அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான மருத்துவ பதிவுகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. மனச்சோர்வு, பதட்டம் காரணமாக தனக்கு மன மற்றும் நடத்தை பிரச்சினைகள் இருப்பதாகவும் வினய் சர்மா தெரிவித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனநல நோயால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை குறைந்தபட்ச தண்டனையாக குறைக்க வேண்டும் என்று  சத்ருகன் சவுகான் வழக்கில் உச்சநீதிமன்றம் 2014ம் ஆண்டு அளித்த தீர்ப்பை இந்த மனுவில் மேற்கோள் காட்டி, வினய் ஷர்மாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

வழக்கின் பின்னணி

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தில் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் நிர்பயா குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதேபோல் ஜனாதிபதிக்கும் கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். இதனால் அவர்களது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: