எகிப்தில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கெய்ரோ: எகிப்தில் வடக்கு சினாய் பகுதியில் தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதலை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். அப்போது நடந்த சண்டையில், 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சி, கடந்த 2013 ஜூலையில் பதவியில் இருந்து தூக்கியெறிப்பட்டார். இதையடுத்து, பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி உள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சினாய் பகுதியில் மட்டும் ராணுவத்தினரும், போலீசாரும் நடத்திய தாக்குதலில் கடந்த 2018 பிப்ரவரி முதல் இதுவரை 450க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், வடக்கு சினாய் பகுதியில் சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் நேற்று அதிகாலை முயன்றனர். அப்போது அவர்களின் தாக்குதலை முறியடிக்க ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 2 அதிகாரிகள், 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories: