திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் பகுதியில் தகவல் தெரிவிக்காமல் வெளியூர் செல்லும் பொதுமக்களின் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தால், நாங்கள் பொறுப்பல்ல என போலீசார் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, நத்தம்பட்டி காவல் நிலைய கட்டுப்பாட்டில் அழகாபுரி, மூவரைவென்றான், சீலநாயக்ககன்பட்டி, காடனேரி, அக்கனாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து நத்தம்பட்டி போலீசார் பொது இடங்களில் ‘காவல்துறை அறிவிப்பு’ என்ற பெயரில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.