புதுடெல்லி: டெல்லி தேர்தலுக்கு பின் ஷாகீன் பாக் போராட்டக்களமானது, ஜாலியன்வாலா பாக் ஆக மாறலாம் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி அச்சம் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றுள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக இப்போராட்டமானது நடைபெற்று வருகிறது.
ஆனால், டெல்லியில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்குப் பின், ஷாகீன் பாக் காலி செய்யப்பட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என பாஜக தலைவவர்கள் கூறி வருகின்றனர். எனவே, டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால், ஷாகீன் போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் செய்தியாளர்களிக்கு பேட்டியளித்த ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசியிடம், பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு ஷாகீன் பாக் காலி செய்யப்படுவதற்கான அறிகுறிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம். ஷாகீன் பாக் இடமானது ஜாலியன்வாலா பாக் போன்று மாறலாம். இது நடக்கக்கூடும்.