வேலூர்: வேலூர், சென்னை, கோவை உள்ளிட்ட 5 சிறைகளில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்குகளில் நன்னடத்தை கைதிகளுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. சிறை கைதிகள் சிறை வாழ்விலிருந்து சமுதாய வாழ்வுக்கு மதிப்புமிக்க முறையில் அடியெடுத்து வைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் கைதிகளுக்கு, சிறைத்துறை மூலம் பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், தமிழக சிறைத்துறையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் முதல்கட்டமாக புழல், வேலூர், புதுக்கோட்டை, கோவை, பாளையங்கோட்டை ஆகிய 5 இடங்களில் 10 கோடி முதலீட்டில் பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மேலும், பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் வருவாய் விவரங்களை 6 மணி நேரத்திற்கு ஒருமுறை சிறைத்துறை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு தனியாக அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.