அண்ணாநகர்: நொளம்பூர் பகுதியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 210 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், திருமங்கலம் சரகத்திற்கு உட்பட்ட நொளம்பூர், ஜெஜெ நகர், திருமங்கலம் காவல் துறையினர் இந்த பள்ளியை தத்தெடுத்து, கடந்த மூன்று மாதமாக புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிக்கு தேவையான மேசை, நாற்காலி, விளையாட்டு உபகரணங்கள், மின் விசிறி, குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர். பள்ளி வளாகத்தை சுற்றி பசுமை தோட்டமாகவும், மழைநீர் சேகரிப்பு மையத்தையும் உருவாக்கியுள்ளனர். இதற்கான ஒப்படைப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார் தலைமை வகித்தார்.