தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம்; அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் உள்பட 92 புதிய பணியிடங்களையும் ஏற்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. இந்நிலையில், விழுப்புரத்தை பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, ஜனவரி 8ம் தேதி) தமிழகத்தின் 33வது மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டது.

அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமாக பிரிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தின உரையில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 22-ம் தென்காசி மாவட்டம் உதயமானது.

அதே போல் 27-ம் தேதி கள்ளக்குறிச்சியையும், 28-ம் தேதி ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரையும், 29-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிதாக உருவான மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குநர் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது

Related Stories: