லக்னோ: உத்தரப் பிரதேசம் லக்னோவில் அந்தர்ராஷ்டிரிய இந்து மகாசபா அமைப்பின் தலைவர் ரஞ்சீத் பச்சன், மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்ட்டார். அந்தர் ராஷ்டிரிய இந்து மகாசபை அமைப்பின் உபி மாநில தலைவராக இருப்பவர் ரஞ்சீத் பச்சன். இவர் நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றார். அவருடன் அவரது உறவினர் அதித்ய வஸ்தவா என்பவரும் சென்றார். பரிவர்தன் சவுக் நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, சால்வை அணிந்த நபர் ஒருவர் இடைமறித்து தடுத்து நிறுத்தினார். பின் அவர்களின் செல்போனை பறித்துக் கொண்டு, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சீத் பச்சன் இறந்தார். வஸ்த்தவாவுக்கு கையில் குண்டு காயம் ஏற்பட்டது.