மதுரை: தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழாவை நடத்தி, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை பெருவுடையார் (பெரிய) கோயிலில் வரும் பிப். 5ல் குடமுழுக்கு விழா நடக்கிறது. இந்த குடமுழக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் திருமுருகன், தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன், கரூர் வக்கீல் தமிழ் ராஜேந்திரன், தமிழ்தேச பொதுவுடமை கட்சித்தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் விசாரித்தனர். தஞ்சை தேவஸ்தானம் மற்றும் அரசுத் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா பணிகள் சிவனடியார்கள் மூலம் நடக்கின்றன. யாகசாலை மற்றும் மகா அபிஷேகம் ஆகியவை ஓதுவார்கள் மூலம் தமிழில் பாடப்படும். இவற்றில் ஏராளமான ஓதுவார்களும், குழந்தைகளும் பங்கேற்கின்றனர். திருமுறை பண்ணிசை, அகண்ட பாராயணம் உள்ளிட்டவை வாசிக்கப்படும். குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடக்கும். தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என வாதிடப்பட்டது.