சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு நேற்று காலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில், முன்னாள் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என்று 100 பேர், சந்தித்துப் பேசினர். அப்போது, ஈரோடு மாவட்டச் செயலாளரும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பண்ணன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். பெருந்துறை ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக கருப்பண்ணன் செயல்பட்டார். நேரடியாக அவருக்கு ஆதரவு தெரிவித்தார். அதையும் மீறி அதிமுக வெற்றி பெற்றது. இதேபோல, கட்சிக்கு எதிராக அமைச்சர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரை கேட்டுக் கொண்ட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது குறித்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் புகார் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனால் கட்சி அலுவலகத்துக்கு 100 பேரும் சென்று புகார் செய்தார். கட்சியின் நிர்வாகிகள், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து புகார் செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.