ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

போட்செஸ்ட்ரூம்: தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச தடகள போட்டியில்  இந்திய வீரர்  நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில்  87.86 மீட்டர் தூரம் எறிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செஸ்ட்ரூமில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்போட்டியில், வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல்  மாதம் முதல் பெரிய போட்டிகளில்  பங்கேற்காமல் வந்த இந்திய இளம் தடகள வீரர் நீரஜ் சோப்ரா  பங்கேற்றார்.  இதில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4வது முயற்சியில் 87.86 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் வரும் ஜூலை  மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.  

இப்போட்டியில், பங்கேற்ற மற்றொரு  இந்திய வீரர் ரோகித்யாதவ் 77.61 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்தார்.  ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி பெற குறைந்தபட்சம் 85 மீட்டர் தூரம் வீச வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஒலிம்பிக் போட்டி தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா கூறுகையில், “இந்த போட்டியில் வெளிப்படுத்திய திமையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நீண்ட நாட்களுக்கு பின் நான் பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் என் திறமையை பரிசோதிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். முதல் மூன்று முயற்சிகளில் 81,82 மீட்டர் வரை எறிந்தேன். சில குறைபாடுகள் இருப்பதாக நினைக்கிறேன். அதில், கவனம் செலுத்த வேண்டும். வரும் மாதங்களில் அதிக போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். காயத்தில் இருந்த போது எனக்கு ஆதரவும், ஆலோசனைகள் வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

Related Stories: