தேன்கனிக்கோட்டை: தளி அருகே பயிர்களை சேதம் செய்த யானை கூட்டத்தை விரட்டும் போது, டூவீலரை தூக்கி வீசி பந்தாடியபடி யானை கூட்டம் சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக 40 யானைகள் இரவில் முகாமிட்டு, காலையில் அருகில் உள்ள கிராம பகுதிக்கு நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தளி அருகே நெல்லூர் கிராமத்தில் உள்ள தோட்டங்களில் நேற்று யானைகள் புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், வாழை உள்ளிட்டவற்றை காலால் மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது. இதை கண்ட விவசாயிகள் யானைகள் கூட்டத்தை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.