சென்னை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 16 பேர் மீது வரும் பிப்ரவரி 1ம் தேதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த வாட்டர்மேன், லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன் உள்ளிட்டோர் பல மாதங்களாக பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் 17 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, போலீசார் 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனையடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுப்பு தெரிவித்தனர். பின்னர் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.