சேலம்: கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மைத்துனர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகேயுள்ள ராமமூர்த்திநகரை சேர்ந்தவர் மணிவாசகம் (60). மாவோயிஸ்டான இவரை கடந்த 2 மாதத்திற்கு முன் கேரள வனப்பகுதியில், அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர். அவரது உடல் ராமமூர்த்தி நகரில் தகனம் செய்யப்பட்டபோது, அவரின் மனைவி கலா, தங்கைகள் சந்திரா, லட்சுமி மற்றும் லட்சுமியின் மகன் சுதாகர் உள்ளிட்ட சிலர், அரசுக்கு எதிராகவும், சுட்டுக்கொலை செய்தததற்கு பழி தீர்ப்போம் சபதம் எடுத்து கோஷமிட்டனர். இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் சங்கர் அளித்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீசில் மணிவாசகத்தின் மனைவி கலா, தங்கை சந்திரா, ராமமூர்த்திநகரில் வசிக்கும் தங்கை லட்சுமி (45), அவரின் கணவர் சாலிவாகனம், மகன் சுதாகர் (23) மற்றும் விவேக் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.