சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி (86). இவர், 1956ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். 1973ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1981 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் தமிழக தலைமை செயலாளராக இருந்தார். 1991ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின் மாநில திட்ட கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினார். அவர் பணியில் இருந்த சமயத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறன்பட செயல்படுத்தினார். பத்மபூஷண் விருதும் பெற்றுள்ளார். ஓய்வுக்கு பிறகு சென்னையில் வசித்து வந்த டி.வி.அந்தோணி நேற்று முன்தினம் காலமானார். டி.வி.அந்தோணியின் இறுதிச்சடங்கு சென்னை அடையாறு புனித லூயி தேவாலயத்தில் நாளை நடக்கிறது.