தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூட்டுறவு பண்டக சாலை மேனேஜராக பணியாற்றி வரும் 3 பேரை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அரிவாளால் வெட்டும் பதைபதைக்கும் CCTV கேமரா காட்சி வெளியாகியுள்ளது. ஆண்டிபட்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு பண்டக சாலையில் பணியாற்றிவரும் மேனேஜர் கோட்டசாமி, சேல்ஸ் மேனேஜர் பெரியசாமி, மற்றும் மேனேஜர் முருகேசன் ஆகிய 3வரும் இன்று காலை 9 மணிக்கு தனது கடையை திறப்பதற்காக வந்துள்ளனர். அங்கு ஆண்டிபட்டியை சேர்ந்த நாகராஜன் மகன் அழகு ராஜா என்பவர் கூட்டுறவு பண்டக சாலைக்கு முன்பு கரும்பு கடைபோட்டு வியாபாரம் செய்துவந்துள்ளார். அப்போது 3 மேனேஜரும் தனது கடை முன்பு அமரக்கூடாது என்று அவர்களை வலியுறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அழகு ராஜா என்பவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.