கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, இந்த ஆண்டில் முதன்முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, இந்த ஆண்டில் முதன்முறையாக முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் நூறு சதவிகிதம் மழை பெய்தது. அவ்வப்போது நீர்வரத்தும் இருந்ததால் வீராணம் ஏரி கடந்த ஆண்டில் மட்டும் ‌9 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. மேலும் நீர் பாசனத்திற்கும், சென்னையின் குடிநீர் தேவைக்கும் போதிய நீர் கிடைத்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதன் முறையாக வீராணம் ஏரி முழுக்கொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கீழணையில் இருந்து விநாடிக்கு 582 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதால் சேத்தியார்தோப்பு அணைக்கட்டுக்கு 412 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. மேலும் வீராணத்தில் நீர்மட்டம் குறைந்தால், உடனடியாக நிரப்ப 9 அடி கொள்ளள‌வு கொண்ட கீழணையில் 8 புள்ளி 5 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளதால், பாசனத்திற்‌காக 96 கனஅடி நீர் ‌மட்டுமே திறக்கப்படுகி‌றது. பாசன தேவை முடிந்ததும், சென்னையின் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் அனுப்பப்படும் என்பதால் கோடை காலத்தை எளிதில் சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: