கோவை: பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த குறிச்சி குளம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது. இங்கு ரூ.52 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம், வாளாங்குளம், சிங்காநல்லூர் குளங்கள் என 8 குளங்கள் உள்ளன. 334.92 ஏக்கர் பரப்பளவுடைய குளமான குறிச்சி குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது.இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கோவை குறிச்சி குளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பொதுப்பணித்துறை குறிச்சி குளத்தை சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது.