இளவரசராக கடைசி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இங்கிலாந்தை விட்டு வெளியேறினார் ஹாரி : கனடாவில் புதிய வாழ்க்கை துவக்கம்

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் பட்டத்தை துறந்த ஹாரி, அந்நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தனர். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாரி - மேகன் தம்பதி தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், ராணி எலிசபெத்தும் இதற்கு அனுமதி அளித்தார். இவர்கள் கனடாவில் தங்கி வாழ உள்ளனர். மேகன் ஏற்கனவே கனடா சென்று விட்ட நிலையில், ஹாரி மட்டுமே பக்கிங்காம் அரண்மனையில் தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5.30 மணி விமானத்தில் ஹாரியும் கனடா புறப்பட்டு சென்றார்.

கனடா புறப்பட்டு செல்வதற்கு முன்பாக, இங்கிலாந்து இளவரசராக லண்டனில் நடந்த இங்கிலாந்து-ஆப்ரிக்கா முதலீட்டு மாநாட்டில் ஹாரி கடைசியாக கலந்து கொண்டார். அப்போது, மலாவி, மொசாம்பிக் மற்றும் மொராக்கோ பிரதமர்களை அவர் சந்தித்து பேசினார். மேலும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தனிப்பட்ட முறையில் 20 நிமிடங்கள் கலந்துரையாடினார். மாநாட்டில் நடந்த விருந்தையும் அவர் தவிர்த்து விட்டார்.  இதனை தொடர்ந்து, கனடாவில் உள்ள  வான்கோருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மனைவி மேகன்,  மகன் ஆர்ச்சியுடன் புதிய வாழ்க்கையை ஹாரி தொடங்கினார்.

Related Stories: