புதுடெல்லி: வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு எதிராக தொடரப்பட்ட நிதி மோசடி வழக்கில், வெளிநாட்டுவாழ் இந்திய(என்ஆர்ஐ) தொழிலதிபர் சி.சி.தம்பியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. லண்டன் பிரயான்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றை, தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி என்பவரின் ‘சான்டெக் எப்இசட்இ’ கடந்த 2009ல் வாங்கியது. தற்போது சஞ்சய் பண்டாரி தலைமறைவாக உள்ளார். இந்த வீட்டை விற்ற தனியார் நிறுவனம், துபாயைச் சேர்ந்த ‘ஸ்கைலைட்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. இதனை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் என்ஆர்ஐ தொழிலதிபர் சி.சி.தம்பி. ராபர்ட் வதேராவுக்காக இந்த வீடு, சட்டவிரோதமாக நிதி மோசடி மூலம் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.