கோலா லம்பூர்: பாமாயில் இறக்குமதியை நிறுத்தும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் அளவுக்கு தங்கள் நாடு பெரிய நாடு அல்ல என மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்தது ஆகியவற்றை மகாதீர் முகமது விமர்சித்து பேசியிருந்தார். மேலும் CAA விவகாரத்திலும் இந்தியாவிற்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தார். இதை தவிர்க்கும் படி இந்தியா வலியுறுத்தியும் அதனை மகாதீர் முகமது கண்டுகொள்ளாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்து வந்தார். மகாதீர் முகமது கருத்தை தொடர்ந்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று வர்த்தகர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியது. மலேசிய நிறுவனங்களிடமிருந்து கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் வாங்குவது தொடர்பான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன. கச்சா பாமாயில் இறக்குமதி குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், நிறுவனங்கள் அதையும் இறக்குமதி செய்ய முன்வரவில்லை.